|
ஹதீஸ் தெளிவுரை: எம். ஏ. ஹபீழ் ஸலபி, பேராதனைப்
பல்கலைக்கழகம், இலங்கை
'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய)
நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர்
பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும்
அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி),
ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்).
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு
நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில்
என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை
ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம்
சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ்
எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன்
செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ
அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும்.
அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான
நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை
என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார்
படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை
என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக
ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க
வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும்
தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும்.
இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.
எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது
கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து
விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள்
என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும்,
தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும்
கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து
நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து
கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன
எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள
வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ்
தெளிவுபடுத்துகின்றது.
ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும்
அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி
இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான
நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க
வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய
நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும்
என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத்
தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த
எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை
என்றால் ரமழான் நம்மில் எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ் படுத்தும் நடவடிக்கைகளில்
முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள்
நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமழான்
மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய
மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம்
அல்-குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை
நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம்
பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே
நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம்
முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம்
பாழ்விடுத்தி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்
பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல்
செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து
விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான்.
இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட
வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய
நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல
அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:
'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்
மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்
மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள்
இறையச்சமுடையோர் ஆகலாம்' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா
- 183 வது வசனம்).
இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல
அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு
நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும்.
நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும்
உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து
விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும்
பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம்
தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள்
என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை
பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம்
உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம்
நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை.
இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ்
நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று
உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட
காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து
அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம்
தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம்
ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம்
உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல்
வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப்
பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம்.
இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின்
தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
'பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்' என்பதை ஆழமாக
விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி
எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும்
என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
-: பொய் பேசாமை :-
பொய் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று
அருள்மறை குர்ஆன் கூறுகிறது.
'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து
வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; ''என்
இறைவன் அல்லாஹ்வே தான்!'' என்று ஒரு மனிதர்
கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும்
அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான
அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர்
பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்;
ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு
வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே!
நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில்
செலுத்தமாட்டான்.'' (அத்தியாயம் 40 ஸூரத்துல் முஃமின்
- 28வது வசனம்)
'..(நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக
அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை
செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக
அல்லாஹ்; இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு
நேர்வழி காட்டமாட்டான்.' (அத்தியாயம் 6 ஸூரத்துல்
அன்-ஆம் 144வது வசனத்தின் கடைசிப் பகுதி).
என அருள்மறை குர்ஆன் கூற, புனிதமிக்க ரமழானில்தான்
பொய்களை அதிகமாகப் பேசுகின்றனர். மார்க்கம் என்ற
பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில
'அமல்'களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி
வீசுகின்றனர். இறை இல்லங்களில் அல்லாஹ்வின் வேதமும்,
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின்
தூய்மையானப் போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக
போலிகளை உலவ விடுகின்றனர் நம்மில் பலர். இவர்கள்
நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், எச்சரிக்கைகளையும்
கவனத்தில் கொள்வதில்லை.
'உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை நன்மையின் பக்கம்
வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே
தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன்
உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து
கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம்
வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில்
மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப்
பதியப்படுகின்றான்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
மஸ்ஊது (ரலி), ஆதார நூல்: புகாரி, முஸ்லிம்).
பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப்
பதியப்பெறுவதுடன், அவன் செல்லுமிடம் நரகமாகவும்
இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய் பேசுவது
மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால்;
எத்தனையோ பொய் சொல்கிறார்கள். நம்மில்
அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை என்ற
எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல்
பொய் சொல்லும் கலையில் ஆற்றல் பெற்றுத்
திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும்
கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில்
எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும்
நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற
அச்சமும் முஸ்லிம்களிடம் எடுபட்டுப் போய்விட்டது.
'எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன்
நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும்
நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதைவிடும் வரை
நயவஞ்சகனாவான்.
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. வழக்காடினால் அநீதியிழைப்பான்
4. உடன்படிக்கைச் செய்தால் அதை மீறுவான். (ஆதாரம்:
புகாரி, முஸ்லிம்.)
இன்று எமது வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குடும்ப
விவகாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா
அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து
நிற்கிறது. எனவே இந்த நோன்பின் மூலம் பயிற்சி பெற்று,
பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக்
கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை. வெறும்
பட்டினிதான் கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின்
எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ரமழான் காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு
என்ற பெயரால் பொய் போசுவது கண்டிப்பாக
நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம்
மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாற வேண்டும்.
'கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன்
என்பதற்குப் போதிய ஆதாரமாகும்' (முஸ்லிம்).
மார்க்கம் என்ற பெயரில் பத்திரிக்கையில்
பிரசுரிக்கப்படுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி
மூலமாக மக்களுக்கு ஒலி-ஒளி பரப்பப்படுவதும் சிலருக்கு
ஆதாரமாகிகிட்டது. மூன்று நாள், பத்து நாள், நாற்பது
நாள் என்று ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் சென்று
வந்தவர்களெல்லாம் தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம்
என்று பேசி தூய்மையான இஸ்லாத்தை மலினப்
படுத்துகிறார்கள். எங்கோ கேட்டதெல்லாம் மார்க்கம்
என்று ஒரு சாரார் பேசும்போது மற்றொரு சாரார் பக்தி
சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமழான் காலங்களில்
அதிகரித்து வருகிறது. நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுக்
கட்டுவதும், பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை
நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும்.
மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்து
கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இறை இல்ல
நிர்வாகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'மாபெரும் சதியாதெனில், மற்றவன் உண்மையென
நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்' (அஹ்மத்) எனவே நாவை
அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை
பொய்யாகும். ஆகவே பொய்யுரைக்காது நாம் பாதுகாப்புடன்
இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத்
துறையிலும் நுழைந்துவிடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக
வழி நடத்துகிறது.
பொய், பொய்சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம்,
மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்து
விடுதல் போன்ற தீய கொடூரங்களை, துரோகங்களைத்
தவிர்ப்பதற்காக நோன்பு என்கிற ஆன்மீக பயிற்சிக்
கூடத்தை இஸ்லாம் ஒருமாத காலம் ஏற்பாடு செய்து
தந்துள்ளது. அடியான் பட்டினி கிடப்பதால் எஜமானனுக்கு
எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடுவதில்லை. கடமையான
நோன்பினை ஒரு மாத காலம் இறை நம்பிக்கையாளர்களிடம்
நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல்,
பொய்யான, தீமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் இருக்க
வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்தப்
பண்புகளை தன் அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே
நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமழானுக்குப் பின்னரும்
இந்த நல்ல பண்புகள் தொடருமானால், இறை
நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம்,
நம்பிக்கை, நல்லுறவு நிலவும்.
'எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ
அவர் நல்லதைப் பேசட்டும், அல்லது மௌனமாக இருக்கட்டும்'
(புகாரி, முஸ்லிம்).
-: தீய நடவடிக்கையிலிருந்து ஒதுங்குதல் :-
நாம் நோற்கும் நோன்பு, நம்மைத் தீய
நடவடிக்கையிலிருந்து தடுக்க வேண்டும். இது நம்மை நல்ல
வழிகளில் செல்லத் தூண்ட வேண்டும். ரமழானிலும் நாம்
நமது தீய செயல்களை மாற்றவில்லை என்றால், நமது ஈமானை
நாம் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 'இபாதத்'
செய்வதற்கும், மன அமைதி பெறுவதற்கும் நோன்பு ஓர் அரிய
வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை நாம்
பயன்படுத்தவில்லையெனில் நாம் துர்பாக்கியசாலிகள்.
குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமான தீமைகளில்
ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் தூக்கத்திற்கு இடையூறாக
நடந்து கொள்கின்றனர். இளைஞர்களின் பெற்றோர்கள் கூட
இவர்களைக் கண்டிக்க முடியாத நிலை. அல்லது கண்டிக்கத்
தவறுகின்றனர்.
'ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம்,
''உண்மையான ஓட்டாண்டி (நஷ்டவாளி) யார் என்பதை நீங்கள்
அறிவீர்களா? எனக் கேட்க, அதற்குத் தோழர்கள் யாரிடம்
திர்ஹமோ, பொருட்களோ அற்ற வறுமை நிலை தோன்றுகின்றதோ
அவரே ஓட்டாண்டியாவான்' என்றனர். அதற்கு நபி(ஸல்)
அவர்கள் என் சமூகத்தில் உண்மையான ஓட்டாண்டி யாரெனில்,
அவர் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்க
வழிபாடுகளையும் அதிகமாக நிறைவேற்றியவராக மறுமையில்
வருவார். அதே நேரம் அம்மனிதர் ஒருவரை ஏசியிருப்பார்.
இன்னொருவரைப் பற்றி அவதூறு கூறியிருப்பார்.
வேறொருவரின் சொத்துக்களை (அநியாயமான முறையில்)
சாப்பிட்டிருப்பார். அடுத்தவரின் இரத்தத்தை (நியாயமற்ற
முறையில்) ஓட்டியிருப்பார். மற்றொருவரை
அடித்திருப்பார். (இவ்வாறான நிலையில், இவரால்) குறித்த
அநியாயத்திற்குட் படுத்தப்பட்டவர்கள் தமது முறையீடுகளை
(அல்லாஹ்விடம்) தெரிவித்து விண்ணப்பிப்பர். அவ்வேளை
அவர்களின் மத்தியில் இவரது (இபாதத் மூலம் கிடைத்த)
நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும். குறித்த அநியாயக்காரன்
பற்றிய (குற்ற) முறையீடுகள் முடிவடையும் முன்னர் அவரது
நன்மைகள் முடிவடைந்துவிடும். எனவே முறைப்பாடு
செய்பவர்களின் தீமைகளிலிருந்து எடுத்து, இவன் மீது
சுமத்தப்படும். பின்னர் நரகில் எறியப்படுவான்'' என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: முஸ்லிம்).
ரமழான் இறையச்சத்தையும், இபாதத்களையும் நம்மிடம்
அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம்
நஷ்டவாழிகள். ரமழானில்தான் முஸ்லிம்கள் மத்தியில்
சண்டையும், சச்சரவும் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம்
பிளவுண்டு சின்னா பின்னமாகிறது. அதுவும் மார்க்கம்
அல்லாததை மார்க்கம் என்று கருதி பிரச்னைகளில் சிக்கித்
தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில்
அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்ற முஸ்லிம்களின்
இரத்தத்தைக் கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாற
வேண்டும். இறை இல்லங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே
சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும், வழிபடவும்
முஃமீன்களுக்கு உரிமையுண்டு. அதைத் தடுக்க இவ்வுலகில்
யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட
எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே பள்ளியில்
விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான்
பிரச்னைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு.
மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து
வருகிறது. எனவே, தவறான சிந்தனையில்
மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமழானிலாவது தமது நிலையை
மாற்றிக்கொள்ள முனைவதோடு தவறான அணுகுமுறைகளை விட்டு
அறிவு வழியில் அமைதியான விடயங்களைக் கருத்தாடலுக்கு
வழிவகுக்க உடன்பட வேண்டும்.
'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும்
முட்டாள் தனமாக நடந்து கொண்டால், நான் நோன்பாளி என்று
கூறட்டும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி, திர்மிதி).
நம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது
திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். ரமழானில்
நோன்பு நோற்று பயிற்சி பெற்றவர்கள், நோன்பை நிறைவு
செய்தவுடன் பெருநாள் அன்று இஸ்லாம் ஹராமாக்கிய
காரியங்களில் (அதாவது திரைப்படங்களை பார்ப்பது, மது
அருந்துவது, இன்னும் பல கேலிக் கூத்துக்களில்
ஈடுபடுவது) ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள்
வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமேத் தவிர,
இவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.
ரமழானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே
நிலையில்தான் இனியும் இருக்கப் போகிறார்கள் என்றால்
புனித ரமழானால் எந்தவித பயனையும் பெறவில்லை என்பதுதான்
இதன் பொருள்.
அதேபோல் நம் சமுதாயத்தின் இளம்யுவதிகள் அரட்டை
அடிப்பதிலும், புறம்பேசுவதிலும், கோள் சொல்வதிலும்,
'சூரியன்' 'வெற்றி' 'சக்தி' 'தென்றல்' போன்ற
தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒலி-ஒளி பரப்பப்படும்
மெகாத்தொடர்கள் முதல் கெகாத் தொடர்கள்வரை பார்ப்பதில்
தங்கள் நேரத்தை வீணடிப்பதிலும் கழிப்பார்கள் என்றால்
அவர்கள் நோற்ற நோன்பால் எந்தவித பயனும் கிடைக்கப்
போவதில்லை. இன்று நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம்,
மோசடி, இலஞ்சம், ஊழல், போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது
பொய், புறம், பேசுவது ஆகிய காரியங்களில் சர்வ
சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு
ஈடுபடுவர்கள் தாம் பசியோடு இருப்பது மட்டும்தான்
இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகிறார்களா?
-: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் :-
ஹதீஸின் இறுதிப்பகுதி அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன்
என்று கூறி நிறைவடைகிறது. பல ஹதீஸ்களும், ஹதீஸ்
குத்ஸியும் அல்லாஹ் மனிதர்களிடமும், ஏனையவற்றிடமும்
தேவையற்றவன் என்று பிரகடனப்படுத்துகின்றன. நாம் நோன்பு
நோற்பதால் அல்லாஹ்வின் மாட்சிமையில் எதுவும்
கூடிவிடுவதுமில்லை: நாம் நோன்பு நோற்காததால் அவனது
ஆட்சி அதிகாரத்தில் எதுவும் குறைவதுமில்லை.
'அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.' (அத்தியாயம்
112- ஸூரத்துல் இக்லாஸ் - 2வது வசனம்).
நாம் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, வழிப்பட்டு நடப்பது
நமது நலனுக்குத்தான். உலக மக்கள் அனைவரும் ஒன்று
சேர்ந்து அல்லாஹ்விடம் தமது தேவையை வேண்டி, அவன் உலக
மக்கள் அனைவருக்கும் வழங்கினாலும், அவனது அருளில் ஒரு
ஊசிமுனையளவு கூட குறைந்து விடாது. அதேபோல் அனைவரும்
ஈமான் கொண்டு பயபக்தியுடன் வணங்கினாலும் அவனுக்கு
எதுவும் கூடப்போவதுமில்லை. எனவே தூய்மையான
எண்ணமில்லாத, வணக்கவழிபாடுகளில் எத்தகைய பயனும் இல்லை.
முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று வழிபட்டு நடந்து
மறுமையில் அல்லாஹ் வழங்கக் காத்திருக்கும்
சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நாம் மாற முனைய
வேண்டும்.
குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் தமது காலத்தையும்,
நேரத்தையும் வீணடித்துவிடாது இந்த ரமழானை சிறந்த
முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கும்,
சமுதாயத்திற்கும் பயனுள்ள முஃமீனாக வாழ்ந்து
அல்லாஹ்வின் மார்க்கத்தை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
காட்டித் தந்த விதத்தில் நிலைநாட்ட வேண்டும்.
எனவே நோன்பு நம்மிடம் எதிர்பார்க்கும் இலட்சியத்தை
அடைந்து கொள்ள ஆவண செய்வோமாக!
'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்
மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்
மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள்
இறையச்சமுடையோர் ஆகலாம்' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா
- 183 வது வசனம்).
புனிதமிகு ரமழான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி
நிற்கிறது. அடுத்த ரமழானை நாம் அடைவோமா இல்லையா என்பதை
யாரும் அறியோம். இந்த ரமழானை சிறந்த முறையில்
பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ
பயிற்சி பெறுவோமாக..!
|